பா.ஜ.க.வுடன் கூட்டணியா? தொல்.திருமாவளவன் பரபரப்பு பேச்சு

பா.ஜ.க.வுடன் கூட்டணியா? தொல்.திருமாவளவன் பரபரப்பு பேச்சு
X

தொல். திருமாவளவன் 

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வி.சி.க .தயங்காது என .தொல்.திருமாவளவன் பரபரப்பாக பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் வெள்ளிவிழா மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெற்றது.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

"மதத்தின் மீது நம்பிக்கை உள்ள சாதாரண மக்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சி தொடர்பு இருக்காது. அதுபோல் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களிலும் சாதாரண மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் மீதும் பகை வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

இந்நிலையில் மதம் சார்ந்த இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் சமூக நல்லிணக்கணத்தை சீர்குலைக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. உள்ளிட்டவை, தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக, தாங்கள் விரும்பும் சமூகத்தை கட்டமைப்பதற்காக, ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்காக மதங்களுக்கு இடையிலான வெறுப்பை வளர்க்கிறார்கள். மக்களின் உணர்வை பயன்படுத்தி, மதங்களுக்கு இடையே வெறுப்பை விதைக்கிறார்கள். அதை தான் வி.சி.க. விமர்சிக்கிறது.

ஆனால் பா.ஜ.க.வை விமர்சித்தால் இந்து மதத்தை விமர்சிப்பதாக பா.ஜ.க.வினர் கூறுகிறார்கள். வி.சி.க.வில் இருப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள்தான். சமூகத்தில் இந்துக்கள்தான் பெரும்பான்மை மக்கள். பா.ஜ.க.வினர் பேசும் வெறுப்பு அரசியலை தான் எதிர்க்கிகிறோம்.

மார்க்ஸ், அம்பேத்கர், பெரியாரின் அரசியலைதான் வி.சி.க .பேசுகிறது. இந்து மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வால் தான் யாரும் இந்து மதத்தில் இணையவில்லை. பா.ஜ.க.வினர் சமத்துவத்தை பேசினால், வி.சி.க. அவர்களோடு கைகோர்க்க தயங்காது. எங்களுக்கும் அவர்களுக்கும் அரசியலிலும், கொள்கைகளிலும்தான் முரண்பாடு.

இவ்வாறு அவர் பேசினார்.

இது நாள் வரை வி.சி.க. பா.ஜ.க.வுடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது என கூறிவந்த திருமாவளவன், தற்போது கூட்டணி வைக்க தயங்க மாட்டோம் என கூறியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story