ஜாதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய டிஎன்பிஎஸ்சி-க்கு அதிகாரம் இல்லை- சென்னை ஐகோர்ட் தகவல்

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 1996-97 ஆம் ஆண்டில் நடத்திய குரூப்-4 தேர்வில் பங்கேற்று, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி என்பவர், கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி, பட்டியலினத்தவர் ஜாதிச் சான்று பெற்று இருந்தார்.
பணி நியமனத்துக்கு கணவர் பெயரில் சமர்ப்பித்த ஜாதிச் சான்றுக்கு பதில், தந்தை பெயரில் பெற்ற ஜாதிச் சான்றை சமர்ப்பிக்கும்படி, அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஜெயராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தகுதியான அதிகாரி வழங்கிய ஜாதிச் சான்றிதழ் செல்லத்தக்கது என்றும், தந்தை பெயரில் பெற்ற ஜாதி சான்றிதழை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்றும் உத்தரவிட்டார்.
அதை எதிர்த்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் திலகவதி ஆகியர் அடங்கிய அமர்வு, பட்டியலினத்தவர்கள் ஜாதிச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களுக்கே அதிகாரம் உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், ஜாதிச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை எனக் கூறி, தனி நீதிபதி உத்தரவில் தலையிட மறுத்து, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மேல் முறையீட்டு வழக்கை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதேசமயம், ஜெயராணியின் ஜாதிச் சான்றிதழை சரிபார்க்கும்படி அரசு கருவூல கணக்கு துறை ஆணையர், மாவட்ட குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும், அதன் மீது விசாரணை நடத்தி ஆறு மாதங்களில் உரிய முடிவை எடுக்க வேண்டும் என மாவட்ட குழுவுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அந்த குழுவின் விசாரணையில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை ஜெயராணி வழங்கலாம் என அனுமதியளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu