கண்ணமங்கலம் அருகே சிவன் கோயிலில் ருத்ராட்ச பழம்

கண்ணமங்கலம் அருகே சிவன் கோயிலில்  ருத்ராட்ச பழம்
X
கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர் கோயில் ருத்ராட்ச மரத்தில் ருத்ராட்ச பழம் பழுத்துள்ளது

கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான இரட்டை சிவாலயம் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் ஆறு வயதுடைய ருத்ராட்ச மரம் உள்ளது. இம்மரத்தில் காய்கள் காய்த்து முதல்முறையாக ஒரு பழம் பழுத்துள்ளது.

ருத்திராட்சம் என்பதற்கு சிவனின் கண்கள் என்று பொருள். சிவபெருமானின் கண் வியர்வையில் தோன்றியதால், இவற்றுக்கு ருத்ராட்சங்கள் என்ற பெயர் வழங்கப் பெற்றது என்று கூறுவர். ருத்ராட்சத்தைப் பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. சிவநெறி நிற்போர் அணியும் திரு ஆபரணங்களில் முதன்மையானது ருத்ராட்சம். ருத்ராட்சம் அணிபவரை எத்தகைய தீவினைகளும் அண்டுவதில்லை என்பர்.

ஒருவர் எத்தனை பூஜைகள் செய்தாலும், விரதங்கள் இருந்தாலும் ருத்ராட்சங்கள் புனைவதற்கு ஈடாகாது என்பது ஆன்றோர் வாக்கு. ருத்ராட்சகங்களை தனியாகவோ பிற மணிகளுடன் மாலையாகக் கோர்த்தோ வடமாகவோ அணிவது வழக்கம்.

இமயமலைச் சாரலிலும் நேபாளத்திலும் வளரக்கூடிய இவ்வகை மரங்களின் பழங்களில் இருந்து பெறப்படும் கொட்டைகளே ருத்ராட்சங்கள். மிளகு வடிவ அளவிலிருந்து சிறு தேங்காய் வடிவ அளவு வரை கிடைக்கப் பெறுகின்றன.

மலைப் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய ருத்ராட்ச மரம் அதிசயமாக இக்கோயிலில் வளர்ந்து ருத்ராட்ச காய்கள் காய்க்க தொடங்கியுள்ளது. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுவட்டார மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மரத்துக்கு மஞ்சள் துணி கட்டி, மரத்தினடியில் அகல் விளக்குகளை வைத்து அதில் விளக்கேற்றி வணங்கி வழிபாடு செய்கின்றனர்.

வேறு எங்கும் இல்லாத வகையில் சிவன் கோயிலிலேயே ருத்ராட்ச மரம் வளர்ந்து பழம் பழுத்திருப்பது இக்கோயிலின் சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story