நாளை, ‘வனத்துக்குள் திருப்பூர்’ 8ம் ஆண்டு நிறைவு விழா

Tirupur news, Tirupur news today- வனத்துக்குள் திருப்பூர் 8ம் ஆண்டு நிறைவு விழா நாளை நடக்கிறது. (கோப்பு படம்)
Tirupur news, Tirupur news today - 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் 8-ம் ஆண்டு நிறைவு விழா, திருப்பூர் தாராபுரம் ரோடு ஸ்ரீவேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவாக ‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்டத்தின் கீழ் இதுவரை 8 ஆண்டுகளில் நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கை 15 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். விழாவில், மரக்கன்று நடுவதற்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களையும், கொடையாளர்களையும் கவுரவிக்கும் நிகழ்ச்சி, பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
‘இயற்கையும், இலக்கியமும்’ என்ற தலைப்பில், மதுரை எம்.பி. வெங்கடேசனும், ‘காலநிலை மாற்றமும்- தொழில் சூழ்நிலையும்’ என்ற தலைப்பில் தமிழக அரசு காலசூழலியல் மாற்றத்துறை நிர்வாக குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், ‘மலையும்-மழையும்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினர் ஓசை காளிதாசன் ஆகியோர் பேசுகின்றனர்.
இதுகுறித்து, வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம் கூறியதாவது,
வெற்றி அறக்கட்டளையின் சார்பில் கடந்த 8 ஆண்டுகளாக, ‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதுதான் எங்களின் நோக்கம். நடப்பட்ட மரக்கன்றுகளில் குறைந்தபட்சம் 90 சதவீதம் கன்றுகள் மரமாக மாறி நிற்கிறது. பாதுகாப்பு வேலி, சொட்டுநீர் பாசன வசதி உள்ள இடங்களில் மரக்கன்று நட்டு பராமரிக்கிறோம்.
தமிழகத்தில், திருப்பூர் மாவட்டம் அதிக பசுமை பரப்பு கொண்டது என்ற நிலை விரைவில் வரும். திருப்பூர் மாவட்டத்தில், இப்போதே மழை அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மரக்கன்று நடுவதற்கு உதவிய விவசாயகளை மரியாதை செய்யும் வகையில் நிறைவு விழா நாளை திருப்பூரில் நடக்கிறது. பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். ஆண்டுதோறும் தலா ரூ.1.5 கோடி மதிப்பில் ‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்டத்துக்கு செலவு செய்கிறோம்.
விவசாய தோட்டங்களுக்கு நேரடியாக சென்று இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி குழி எடுத்து நடும் பணியை மேற்கொள்கிறோம். இதற்கான நிதி உதவியை வெற்றி அறக்கட்டளைக்கு திருப்பூர் தொழிலதிபர்கள் நன்கொடையாக வழங்குகின்றனர். தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டம் தொடர்வது பெருமையாக இருக்கிறது. ஆண்டுதோறும் மரக்கனறுகள் நடுவதால் மழை அளவு பெருகி வருகிறது. தனித்துவமான இந்த திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்ட பகுதிகளில், இதுவரை 15 லட்சத்து 85 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் இன்னும் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில், திருப்பூர் மாவட்டம், வனத்துக்குள் உள்ள ஒரு மாவட்டமாக மாறிவிடும் என்பது, நிதர்சனம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu