செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில், புதிய தொழில்நுட்பம்; திருப்பூர் தொழில்துறையினர் ஆர்வம்

செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில், புதிய தொழில்நுட்பம்; திருப்பூர் தொழில்துறையினர் ஆர்வம்
X

tirupur News, tirupur News today- செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில், திருப்பூர் தொழில்துறையினர் ஆர்வம் (கோப்பு படம்)

tirupur News, tirupur News today- செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில், புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. இதில், திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

tirupur News, tirupur News today- திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் ஐ.கே.எப்., அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், 49வது இந்தியா இன்டர்நேஷனல் நிட்பேர் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

பிராண்ட்ஸ் அண்ட் சோர்சிங் அசோசியேஷன் சேர்மன் சுவாமிநாதன் கண்காட்சியை துவக்கி வைத்தார். ஐ.கே.எப்., அசோசியேஷன் தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், ஜவுளி ஏற்றுமதி வர்த்தக முகமைகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர், செயற்கை நூலிழை ஆடை கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.

முன்னதாக சுவாமிநாதன் கூறியதாவது,

கடந்த 20 ஆண்டுகளில் திருப்பூர் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில் கவனம் செலுத்தப்படுகிறது. சீனாவுக்கு மாற்றாக இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய பல்வேறு நாடுகளும் விரும்புகின்றன. அந்நாடுகளை ஈர்க்கும் வகையில் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மறுசுழற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பிடம் பெற்று நாட்டின் தலைசிறந்த தொழில் நகராக திருப்பூர் உயர்ந்துள்ளது. அடுத்தகட்டமாக பின்னலாடை உற்பத்தி யை டிஜிட்டல்மயமாக்க தொழில்துறையினர் திட்டமிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.கே.எப்., அசோசியேஷன் தலைவர் சக்திவேல் கூறியதாவது,

பின்னலாடை உற்பத்தியில் தனிமுத்திரை பதித்துள்ள திருப்பூர் 80 சதவீதம் பருத்தி, 20 சதவீதம் செயற்கை நூலிழை ஆடை தயாரித்து வருகிறது.சர்வதேச வர்த்தகம் 80 சதவீதம் செயற்கை நூலிழை, 20 சதவீதம் பருத்தி என்ற அடிப்படையில் நடக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி திருப்பூரின் பருத்தி மற்றும் செயற்கை நூலிழை ஆடைகள் ஏற்றுமதி 50:50 என்று உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

சாக்கடை கால்வாய்களில் குப்பை மேட்டில் நீக்கமற நிறைந்து சுற்றுச் சூழலுக்கு பேராபத்து விளைவிக்கும் 'பெட் பாட்டில்' எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து சாயமிடப்பட்ட பாலியஸ்டர் நூல் தயாரிப்பதில் திருப்பூரை சேர்ந்த தனியார் காட்டன் குழுமம் சாதனை படைத்துள்ளது.

சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு, மலை போல் செலவு வைக்கும் நிலையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் நூலிழை தயாரிக்கும் போதே, நிறமேற்றப்பட்ட நூலாக மாற்றும் தொழில்நுட்பமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் தினமும் 70 லட்சம் பெட் பாட்டில்களில் இருந்து பைபர் தயாரிக்கிறது.இதன் வாயிலாக 1.30 லட்சம் கிலோ நூலிழை உற்பத்தி செய்யப்படுகிறது. ஒன்று, இரண்டல்ல இதுவரை 60 வகையான நிறங்களில் நூலிழை தயாரித்து துணியாகவும், ஆடையாகவும் மாற்றி அசத்தியுள்ளனர்.

இதேபோல் பனியன் ஆடை தயாரிக்கும் போது மொத்த துணியில் 15 சதவீதம் வரை கட்டிங் வேஸ்டாக நீக்கப்படுகிறது. அவற்றை மீண்டும் பைபர் ஆகவே மாற்றி அதிலிருந்து நூல் தயாரிக்கும் தொழில்நு ட்பமும் வெற்றியடைந்துள்ளது. மறுசுழற்சி முறையில் பருத்தி நூலிழை தயாரிக்கும் போது 98 சதவீத கார்பன் டை ஆக்ஸைடு உருவாவது தவிர்க்கப்படுகிறது. வழக்கமான மின்திறனில் 78 சதவீதம் சேமிக்கப்படுவதோடு தண்ணீர் பயன்பாடும் 100 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது.

பாலியஸ்டர் நூலிழை தயாரிக்கும் போது 96 சதவீதம் அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடு உருவாவது குறைந்துள்ளது. மின்திறனில் 78 சதவீதமும், தண்ணீர் பயன்பாட்டில் 96 சதவீதம் குறைந்துள்ளது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் காட்டன் குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குனர் பிரித்வி கூறியதாவது,

எங்கள் நிறுவனம் மறுசுழற்சி முறையில் பெட் பாட்டில் களில் இருந்து பாலியஸ்டர் நூல் தயாரிக்கிறது. சொகுசு மெத்தை தயாரிக்க பயன்படும் ஹாலோ பைபர்களும் இதிலிருந்து கிடைக்கிறது. நிட்பேர் கண்காட்சியில் வைத்துள்ளடி-சர்ட்டுகள், 80 சதவீதம் மறுசுழற்சி பாலியஸ்டர், 20 சதவீதம் மறுசுழற்சி விஸ்கோஸ் என 100 சதவீதம் மறுசுழற்சி முறையில் தயாரித்துள்ளோம்.

ஒரு டி-சர்ட் தயாரிப்பின் மூலம் 7.82 கிலோ கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுவது குறைந்துள்ளது. மேலும் 39.74 லிட்டர் தண்ணீர் பயன்பாடு சேகரமாகியுள்ளது. அதாவது காரில் 28.56 கி.மீ., தூரம் பயணிக்கும் போது உருவாகும் சுற்றுச்சூழல் மாசு அளவுக்கு மாசுபடுவது குறைந்துள்ளது. 160.37 நாட்களுக்கு பயன்படுத்தும் குடிநீர் சேகரமாகியுள்ளது. பெட் பாட்டில் கழிவில் இருந்து பாலியஸ்டர் நூல் தயாரிக்கும் போது நிறமிகளை சேர்ப்பதால் எதிர்பார்க்கும் வண்ணத்தில் பாலியஸ்டர் நூல் தயாரிக்கிறோம். ஒரு சொட்டு தண்ணீர் கூட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
அடுத்த சில ஆண்டுகளில் AI மூலம் வந்துவரும் அற்புத மாற்றங்கள்!