‘மணிமேகலை விருது’ விண்ணப்பிக்க திருப்பூர் கலெக்டர் அழைப்பு

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில், மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில், கிராம ஊராட்சிப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோருக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை அரசாணை (நிலை) எண் 133-ல் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மணிமேகலை விருது தேர்வுக்கான தகுதிகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வார மற்றும் மாதாந்திர கூட்டங்களை முறையாக நடத்தியிருக்க வேண்டும். குழுவில் சேமிக்கப்படும் சேமிப்புத்தொகையினை சரியான முறையில் பயன்படுத்தியிருக்க வேண்டும். குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் தகுதியான அனைத்து குழுக்களுக்கும் வங்கியிலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். திறன் வளர்ப்புப் பயிற்சி மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான பயிற்சிகள் அனைத்து உறுப்பினர்களும் பெற்றிருக்க வேண்டும்.
சமூக மேம்பாட்டு பணிகளில் மக்கள் அமைப்புகள் ஈடுபட்டிருக்க வேண்டும். எனவே மேற்கண்ட காரணிகளின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 4 ஆண்டுகள்முடித்த சுய உதவிக்குழுக்கள், தர மதிப்பீட்டில் ஏ அல்லது பி தகுதி உள்ள பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, ஏ அல்லது பி தகுதி உள்ள வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் ஏ அல்லது பி தகுதி உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்ப்புறங்களில் தகுதிவாய்ந்த 4 ஆண்டுகள் முடித்த சுய உதவிக் குழுக்கள், ஏ அல்லது பி தகுதி உள்ள பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் ஒரு ஆண்டு நிறைவு செய்த நகர அளவிலான கூட்டமைப்பு ஆகிய மக்கள் அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விண்ணப்பங்களை ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்திலும், நகர்ப்புற பகுதிகளில் தகுதியான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி-நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களிலும் 25.6.2023-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் தொடர்புக்கு - உதவி திட்ட அலுவலர் (கூடுகை மற்றும் கூட்டாண்மை),அறை எண்.305 மூன்றாவது தளம், மகளிர் திட்ட அலுவலகம், திருப்பூர் என்ற முகவரியையும் 9444094396, 8825552321, 0421-2971149 என்ற செல்போன்-தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu