திருப்பூர்; காரில் 500 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது

tirupur News, tirupur News today- காரில் 500 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை, திருப்பூரில் போலீசார் கைது செய்தனர். (கோப்பு படம்)
tirupur News, tirupur News today- கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு ஒரு காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக திருப்பூர் மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் உத்தரவின்படி நல்லூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று காலை, காசிபாளையம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது காருக்குள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த மூட்டைகளில் என்ன இருக்கிறது என்பது குறித்து, காரில் இருந்த 2 பேரிடம் போலீசார் கேட்டனர். அப்போது அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை. சந்தேகத்தின் பேரில் அந்த மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்தனர். அப்போது அவற்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து காரில் இருந்தவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் சேலத்தை சேர்ந்த அர்ஜுனன் மகன் மணிகண்டன் (வயது 38), சேலம் ராம் தியேட்டர் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் அய்யப்பன் (32) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் காரில் மூட்டை மூட்டையாக இருந்த 501 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் இருவரும் சேர்ந்து திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்ய, பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை, காரில் கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து நல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடைகளில் சோதனை அவசியம்
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் என பலரும், இந்த கடைகளுக்கு வழக்கமாக சென்று, புகையிலை பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். மறைத்து வைத்து விற்கப்படும் புகையிலை பொருட்கள், புதிய நபர்களுக்கு விற்கப்படுவதில்லை. ஆனால், அறிமுகமான வாடிக்கையாளர்களுக்கு தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. வழக்கத்தை விட அதன் விலை சற்று கூடுதலாகவும் உள்ளது. எனவே, பெட்டிக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினால், இன்னும் அதிகளவில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்ற முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu