திருப்பூரில் டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் சாலைமறியல்

திருப்பூர் கே.வி.ஆர். நகரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டு கே.வி.ஆர் நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை குடியிருப்பு பகுதியில் உள்ளதாலும், கே.வி.ஆர்., நகர் பகுதி மெயின் ரோட்டில் இருப்பதாலும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்த கடையை மூடவேண்டும், அல்லது வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை மனு அளிக்கப்பட்டது.
புகார் குறித்த எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் தரப்பில் இல்லாததால், இன்று காலை 42-வது வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில் அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்கள் கே. வி.ஆர்., நகர் ரோட்டில் அமர்ந்து கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
கவுன்சிலர் அன்பகம் திருப்பதி கூறுகையில், இந்த டாஸ்மாக் கடையால் இப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கோவில்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சார்ந்த அமைப்புகள் இங்கு அதிகமாக உள்ளன. உடனடியாக மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில், டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும், என்றார்.
உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu