திருப்பூரில் கவுன்சிலர் காரை திருடிய வடமாநில வாலிபர் கைது

திருப்பூரில், ம.தி.மு.க., கவுன்சிலர் காரை திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் காந்திநகரை அடுத்த ஈ.பி.காலனியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 57). இவர் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர். ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர். நேற்று முன்தினம் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இவருடைய காரை காணவில்லை. மர்ம நபர் காரை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நாகராஜ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அதில் கார் காணாமல் போன அன்று காலை, வாலிபர் ஒருவர் காரை எடுத்து ஓட்டி செல்வது பதிவாகி இருந்தது. நாகராஜ் வீட்டின் அருகே வசிக்கும் வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் காரை திருடி சென்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்துவாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், நாகராஜின் மகன் கார்த்திக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கார் சாவியை தொலைத்துள்ளார். பின்னர் மாற்று சாவியின் மூலமாக காரை ஓட்டி வந்துள்ளனர். தொலைந்த சாவி வாலிபர் கையில் கிடைத்துள்ளது. அந்த சாவியை கொண்டு நாகராஜின் காரை திறந்து பார்த்துள்ளார். அது சரியாக இருந்ததால், காரை திருடி சாமுண்டிபுரம் பகுதியில் நிறுத்தி உள்ளார். பின்னர் வலையங்காடு பகுதியை சேர்ந்த ஒரு கும்பலிடம் காரை விற்றுக் கொடுக்குமாறும் அவர் கூறி உள்ளார். இந்த நிலையில்தான் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டார்.
கைதான வாலிபர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் தற்போது பெற்றோருடன் காந்திநகர் பகுதியில் வசித்து வருவதும், பிளஸ்-2 முடித்துள்ள அவர் கல்லூரிக்கு செல்ல காத்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu