எம்எல்ஏ க்களிடம் கோரிக்கை வைக்க தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஆயத்தம்

Tirupur News- வரும் 6ம் தேதி, அந்தந்த பகுதி எம்எல்ஏ க்களிடம் நேரில் சந்தித்து, கோரிக்கை வைக்க உள்ள தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு திட்டம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அபரிதமாக உயர்த்தப்பட்ட மின்சார நிலைக்கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். பீக் ஹவர்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் கடந்த 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அந்த போராட்டத்துக்கு பிறகும் முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், இதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக அடுத்த மாதம் 6-ம் தேதி ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்தித்து தொழில் நிலைமை குறித்து முறையிடுவது, டிசம்பர் மாதம் 4-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, டிசம்பர் மாதம் 18-ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என்று அறிவித்தனர்.
அதன்படி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள டீமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர்கள் டீமா தலைவர் முத்துரத்தினம், நிட்மா இணை தலைவர் கோபிநாத் பழனியப்பன், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடுத்த மாதம் 6-ம் தேதி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களை அழைத்து அவர்களிடம் சிறு, குறு, நடுத்தர தொழிலை பாதுகாக்க சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும், தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
நீண்ட நாட்களாக இந்த போராட்டம் நீண்டுக்கொண்டே போனாலும் அரசு தரப்பில் இருந்து இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், கோரிக்கைகள் குறித்து முடிவு செய்து அறிவிக்கவும் முன்வராதது தொழில்துறையினர் மத்தியில் கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu