திருப்பூரில் கெட்டுப்போன 2 ஆயிரம் முட்டைகள் அழிப்பு

Tirupur News- திருப்பூரில் கெட்டுப்போன முட்டைகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் ஆம்லெட், கேக் தயாரிக்க வைத்திருந்த 2 ஆயிரம் உடைந்த, கெட்டுப்போன முட்டைகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.
திருப்பூா் கூத்தம்பாளையம் சோழன் நகா் பகுதியில் உள்ள முட்டை மொத்த விற்பனை செய்யும் வீட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். அங்கு, 12 ஆயிரம் முட்டைகள் வைக்கப்பட்டிருந்தன.
ஆய்வின்போது, ஒரு அறையில் உடைந்த மற்றும் அழுகிய நிலையில் கெட்டுப்போன 2 ஆயிரம் முட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை சாலையோரங்களில் உள்ள சிறிய கடைகளுக்கு ஆம்லெட், ஆப்பாயில் தயாரிப்பதற்காகவும், சிறிய பேக்கரிகளில் கேக் தயாரிக்கவும் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அந்த முட்டைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனா். மேலும், முட்டை விற்பனை செய்தவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது,
இதுபோன்ற முட்டைகளை பண்ணையில் இருந்து இடைத்தரகா்கள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து சிறு வியாபாரிகள் மூலம் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. முட்டை பண்ணை உரிமையாளா்கள் தங்கள் பண்ணையில் உற்பத்தி ஆகும் உடைந்த முட்டைகளை தாங்களே பாதுகாப்பான முறையில் அழிக்க வேண்டும்.
உடைந்த முட்டைகளில் நோய்த் தொற்று பரப்பக்கூடிய கிருமிகள் பெருகும் வாய்ப்புள்ளதால் அதை சாப்பிடுபவா்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. மேலும், உடைந்த முட்டைகளை எந்த பண்ணையில் இருந்து வாங்கி வந்தாா்கள், யாா் யாரெல்லாம் இதில் தொடா்பு உடையவா்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu