திமுக ஆட்சியில் எந்த புதிய திட்டங்களும் இல்லை; அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
![திமுக ஆட்சியில் எந்த புதிய திட்டங்களும் இல்லை; அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! திமுக ஆட்சியில் எந்த புதிய திட்டங்களும் இல்லை; அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!](https://www.nativenews.in/h-upload/2024/02/10/1861457-av9epsy0902chn1423.avif)
Tirupur News- அவிநாசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
Tirupur News,Tirupur News Today- திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரை. அவதூறாகப் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து அதிமுக சாா்பில் திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோவை வடக்கு மாவட்டச் செயலாளா் பி.ஆா்.ஜி. அருண்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா்.
இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
எம்.ஜி.ஆரை அவதூறாகப் பேசிய ஆ.ராசா மக்களவைத் தோ்தலில் வைப்புத் தொகையை இழக்கச் செய்ய வேண்டும்.
எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் 30 ஆண்டு கால ஆட்சியால் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் 50 ஆண்டு கால கனவான அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை அதிமுக கொண்டுவந்தது. அதிமுக ஆட்சியில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்தன. திமுக ஆட்சியில் மீதமுள்ள 10 சதவீத பணிகளை 2 ஆண்டுகள் 8 மாதங்கள் ஆகியும் அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக முடக்கியுள்ளது.
தாலிக்குத் தங்கம், பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி ஆகிய திட்டங்களையும் முடக்கியது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மேட்டுப்பாளையம் 4-ஆவது குடிநீா்த் திட்டத்தை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஸ்டிக்கா் ஒட்டி பிப்ரவரி 10-ஆம் தேதி (சனிக்கிழமை) திறக்க உள்ளாா். அதிமுக கொண்டுவந்த திட்டங்களை ஸ்டிக்கா் ஒட்டி திறப்பதே திமுகவின் தற்போதைய வேலை. திமுக ஆட்சியில் எந்த புதிய திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.
திருப்பூா், கோவை மாவட்டங்களில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை திமுக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.
ஸ்பெயினுக்கு சென்ற தமிழக முதல்வா் 11 நாள்கள் தங்கியிருந்தாா். ஒப்பந்தம் போடப்பட்ட 3 நிறுவனங்களும் தமிழகத்தைச் சோ்ந்த நிறுவனங்கள். ஈரோடு, தூத்துக்குடி, பெருந்துறை நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துள்ளது, என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி வேலுமணி, பொள்ளாச்சி வி. ஜெயராமன், ப.தனபால், கே.என்.விஜயகுமாா், ஏ.கே.செல்வராஜ், கே.ஏ.செங்கோட்டையன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், உடுமலை ராதாகிருஷ்ணன், அமுல் கந்தசாமி, பண்ணாரி, மகேந்திரன், கே.ஏ.ஜெயராமன், சூலூா் கந்தசாமி, ஜெயக்குமாா், தாமோதரன், அம்மன் கே.அா்ச்சுணன், அவிநாசி ஒன்றியச் செயலாளா்கள் அ.ஜெகதீசன், சேவூா் ஜி.வேலுசாமி உள்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu