தாராபுரத்தில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

தாராபுரத்தில் பூட்டை உடைத்து 10  பவுன் நகை திருட்டு
X

தாராபுரம் அருகே வீட்டு பூட்டை உடைத்து, 10 பவுன் நகை திருட்டு.

தாராபுரம் அருகே வீட்டு பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ரபிதீன் (வயது45). இவர் பெங்களூருவில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ரபிதீன், கொளத்துப்பாளையம் வந்துள்ளார். பிறகு ரபிதீன் மனைவியிடம் பெங்களூரு செல்லலாம் என கூறியுள்ளார். இதையடுத்து வீட்டை பூட்டிவிட்டு, மனைவி ஷர்மிளா பானுவை அழைத்துக்கொண்டு ரபிதீன் பெங்களூரு சென்று, அங்கு குடும்பத்துடன் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி இரவு, ரபிதீன் தம்பி பரூக், கொளத்துப்பாளையத்தில் உள்ள ரபிதீன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது முன்வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட பரூக், தனது அண்ணன் ரபிதீனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த ரபிதீன் குடும்பத்துடன் புறப்பட்டு வருவதாகவும், அதுவரை யாரும் வீட்டிற்குள் செல்ல வேண்டாம் எனவும் கூறினார். பிறகு நேற்று முன்தினம் காலை, வீட்டுக்கு வந்த ரபிதீன் போலீசில் தகவல் கொடுத்தார்.

தாராபுரம் போலீசார், ரபிதீன் வீட்டிற்கு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் ரபிதீன் வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. கைரேகை நிபுணர்களை வரவழைத்து, மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்..

Next Story