புதையல் கிடைக்கும் என ஆசை வார்த்தைக்கூறி 56 லட்சம் மோசடி

புதையல் மோசடி (காட்சிப்படம்)
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் நவமணி. இவர் விவசாயம் செய்து வருகிறார்.
ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த செல்வி, சுமதி, ஜெகன் ஆகியோர் நவமணியிடம் நண்பர்களாக பழகி ரூ.31 கோடி பணம் மற்றும் 150 சவரன் தங்க நகைகள் புதையல் இருப்பதாகவும் பணம் செலவு செய்தால் அதனை எடுக்க முடியும் என கூறியுள்ளனர்.
அதனை நம்பிய நவமணியிடம் கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது பல தவணைகளில் சுமார் ரூ.56 லட்சம் வரை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக செல்வி மற்றும் சுமதியிடம் நவமணி பலமுறை புதையல் குறித்து கேட்ட போது நீதிபதி, வழக்கறிஞர்கள் போன்று தொலைபேசியில் பேசி பதில் அளித்து வந்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த நவமணி சம்பவம் குறித்து காவல்துறை துறை இயக்குநர், காவல் துறை தலைவர் முதல் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையம் வரை இணையவழி மூலம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு துறையில் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் புதையல் இருப்பதாக கூறி ஏமாற்றி வரும் நபர்களிடம், அப்பாவி மக்கள் ஏமாந்து வரும் நிலை தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவத்தால் வாணியம்பாடி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu