ரயிலில் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சென்னை ரயில்வே பாதுகாப்பு படை

ரயிலில் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சென்னை ரயில்வே பாதுகாப்பு படை

ரயிலில் கஞ்சா பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை 

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சாவை சென்னை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் தமிழகத்தில் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையம் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மது பாட்டில்கள் கஞ்சா குட்கா போன்றவற்றை மர்மநபர்கள் கடத்துவதாக வருகின்ற புகாரின் அடிப்படையில் ரயில்வே காவல் துறை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் சென்னையிலிருந்து வந்த தனிப்பிரிவு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தபோது இருக்கையின் அடியில் கேட்பாரற்று கிடந்த சுமார் 10 கிலோ கஞ்சாவை சென்னை ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு பிரிவு துணை ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து அப்பேட்டியில் பயணம் செய்த ரயில் பயணிகளிடம் விசாரித்தபோது, இருக்கையில் அமர்ந்திருந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் சென்னை ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட 10 கிலோ கஞ்சாவை வேலூர் போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story