பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்
திருநெல்வேலி மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் ஆடுகளை வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை ஆட்டுச்சந்தை திறக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட வகையில் விற்பனைக்கு வந்த ஆடுகளை ஆயிரக்கணக்கான மக்கள் வாங்கி சென்றனர்.
நெல்லை மேலப்பாளையத்தில் மாநகராட்சி சார்பில் கால்நடை சந்தை செயல்படுகிறது. வாராவாரம் செவ்வாய்க்கிழமை இந்த கால்நடைச் சந்தை நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக சமூக விதிகளை கடைபிடிக்க முடியாத அளவிற்கு கூட்டம் கூடும் என்பதால் கால்நடை சந்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே பூட்டப்பட்டது.
இந்த நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு பொது மக்களின் தேவைக்காக கால்நடை சந்தை திறக்கப்பட வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மற்றும் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் நேற்று கால்நடை சந்தை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் கால்நடை சந்தை திறப்பதற்கு அனுமதி கொடுத்தார். அதன்படி இன்று காலை ஆறு மணிக்கு கால்நடை சந்தை தொடங்கியது. காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். வெள்ளாடு, செம்மறிகிடா, மயிலம்பாடி, பொட்டுகுட்டி வேலி ஆடு, கோரஆடு, பிள்ளைபோர், கரும்போர் என 30 க்கும் மேற்பட்ட ஆட்டு வகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஆட்டின் விலை 3009 ரூபாயில் தொடங்கி 50,000 ரூபாய் வரை விற்பனை ஆனது. காலை முதல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆட்டை விற்பனைக்கு கொண்டு வரும் வியாபாரிகள் மாஸ்க் அணிந்து உள்ளே வர வேண்டும். சந்தைக்குள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக ஒலிபெருக்கியில் மாநகராட்சி ஊழியர்கள் அறிவுறுத்திய வண்ணம் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu