கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக வந்தனர். பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தாத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கால்நடை தீவனங்கள் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும், கடந்து 2019ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் முகமது அலி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த அதிமுக ஆட்சியில் 2019ஆம் ஆண்டு பசும் பால் லிட்டருக்கு 4 ரூபாய், எருமைப் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.
இதனால் பல்வேறு உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களை நோக்கி செல்கின்றனர். இதன் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு பால் கொள்முதல் குறைந்துள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து பால் நிறுத்த போராட்டத்தை நோக்கி செல்ல வேண்டி இருக்கும் என்று தெரிவித்தார்.