கோயில்களில் வழிபட அனுமதி கோரி இந்து முன்னணியினர் நெல்லை ஆட்சியரிடம் மனு
நெல்லை மாவட்டத்தில் இந்து கோயில்களில் மட்டும், திட்டமிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணியினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டத்தில், நெல்லையப்பர் திருக்கோயில், பாபநாசம் மற்றும் காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆகிய கோயில்களில் ஆடி அமாவாசை மற்றும் ஆடி பூரம் விழாக்களை முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், ஆடி அமாவாசை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் திதி கொடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து இந்து முன்னணி சார்பில், அதன் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் இன்று 50க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்போது அவர்கள், மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பியபடி திடீரென ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவலர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐந்து நபர்களை மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, வி.பி.ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில்:நெல்லை மாவட்டத்தில் மற்ற மதத்தினர் வழக்கம் போல் திருவிழாக்களை நடத்துகின்றனர்.ஆனால், இந்து கோவில்களில் மட்டும் அதிகாரிகள் திட்டமிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கின்றனர். ஆடி அமாவாசை தினத்தில் இந்துக்கள் ஆண்டுதோறும் திதி கொடுப்பார்கள். அதை நடத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதை கண்டித்து தான் இன்று போராட்டம் நடத்தினோம் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu