நெல்லை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஆய்வு

நெல்லை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஆய்வு
X
நெல்லை வாக்கு எண்ணும் மையத்தில், தேர்தல் பொது மற்றும் காவல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 189 பேர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.

அதில் 82 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்ட பால் கண்ணனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு முன்மொழிந்த 10 நபர்களில் 2 நபர்களின் பெயர்கள் குளறுபடி இருப்பதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் உள்நோக்கம் இருப்பதாக கூறி, வேட்பாளர் பால் கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று இரவு வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடி நின்றதால் பரபரப்பு நிலவியது. இதுபோன்ற சூழலில் நெல்லை வாக்கு எண்ணும் மையத்தினை இன்று தேர்தல் பொது மற்றும் காவல் பார்வையாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதாவது, 5 சட்டமன்ற தொகுதிகளிலும் எண்ணப்படும் வாக்குகள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன. ஏற்கனவே மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷ்ணு இந்த வாக்கு எண்ணும் மையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து இன்று திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் டாக்டர் சுப்ரதாகுப்தா, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் சுரேந்திரன் நாராயண் பாண்டே, நாங்குநேரி தொகுதி பார்வையாளர் நூன்சாவாரத்திருமலை நாயக், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் அலோகேஷ் பிரசாத் மற்றும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சுதன்சுகுமார் ஐபிஎஸ் ஆகிய அதிகாரிகள் நெல்லை அரசு பொறியியல் மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணும் பணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார் அங்கு தற்போது பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை விரைந்து முடிப்பதுடன் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாத வகையில் தடுப்புகளை நுணுக்கமாக அமைக்கவும், பார்வையாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 லட்சத்து 53 ஆயிரத்து 559 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் இவளுக்காக மாவட்டம் முழுதும் 1924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai jobs loss