ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் அகஸ்தியர் அருவி

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் அகஸ்தியர் அருவி
X

அகஸ்தியர் அருவி. கோப்பு படம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதுமே தண்ணீர் கொட்டுகிறது.

அருவியில் குளிப்பது என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான். அருவி என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது குற்றாலம் தான். இங்கு மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, தேனருவி,செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றாலம் அருவி என்று பல அருவிகள் உள்ளன.மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த அருவிகளுக்கு கேரளாவில் மழைகாலம் தொடங்கினால் தான் தண்ணீர் வரும். பொதுவாக ஜுன் முதல் ஆகஸ்டு வரை குற்றால சீசன் அருமையாக இருக்கும். சில ஆண்டுகளில் மழை இல்லாமல் சீசன் பொய்த்து போவது உண்டு. ஆனால் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதுமே தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும். அதனால் தண்ணீர் விழுமோ, விழாதோ என்ற சந்தேகம் இல்லாமல் சுற்றுலா பயணிகள் தைரியமாக அகஸ்தியர் அருவிக்கு வந்து குளித்து மகிழலாம்.

அகத்தியர் அருவி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசத்தில் உள்ளது. இந்த அருவிக்குக் காரையார் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் வருகிறது. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுமைக்கும் தண்ணீர் வருவதால், அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் இந்த அருவி உள்ளது.

பாபநாசம் என்பதன் பொருள் பாவங்களை நிவர்த்தி செய்வது என்பதாகும்.அதனால் இந்த அருவியில் இருந்து விழும் தண்ணீரில் மக்கள் குளித்தால் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வருவி திருநெல்வேலியிலிருந்து 42கி.மீ தொலைவில் பாபநாசத்தில் அமைந்துள்ளது. அம்பாசமுத்திரம் ரெயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ. தூரம். தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக 80 கி.மீ தூரத்தில் அருவி உள்ளது.

வடகிழக்குப் பருவமழையின்போது அருவியில் விழும் தண்ணீரின் அளவும் வேகமும் அதிகமாக இருக்கும்போது. பாதுகாப்பு காரணமாக அப்போது மட்டும் சில நாட்கள் பொது மக்கள் இங்கு வந்து செல்ல அனுமதி கிடையாது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அருகிலுள்ளதால் அருவியிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படும். அருவியின் மேற்பகுதியில் கல்யாண தீீீீர்த்தம் உள்ளது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தினரால் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இங்கு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. பாபநாச நாதர் கோயிலுக்கு வருபவர்கள் இந்த அருவிக்கு வந்து குளித்து விட்டு செல்வார்கள். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சபரிமலைக்குச் சென்று வருபவர்களும் இந்த அருவிக்கு வந்து குளித்து செல்வார்கள். அருவிக்கு அருகில் அகத்தியருக்கு சிறு கோவில் உள்ளது. அருவியில் குளிக்க ஆசைபட்டால் நம்பி வாங்க இந்த அருவியில் குளித்து மகிழலாம்.

Tags

Next Story
கடனை தவிர்க்க AI உங்களுக்குத் துணை!