நெல்லையில் கனமழை: கிருஷ்ணாபுரம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

திருநெல்வேலியுில் பெய்த கன மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
நெல்லையில் பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தண்ணீரில் தத்தளித்த பொதுமக்களை ரப்பர் படகு மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நெல்லை மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பிற்பகல் சுமார் 2 மணி நேரம் தொடர்ச்சியாக கன மழை கொட்டித் தீர்த்தது.
தொடர்ந்து மாநகர் பகுதியில் விட்டு விட்டு லேசான மழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் பாளையங்கோட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் நெசவர் காலனி தாழ்வான பகுதி என்பதால் பிற்பகல் பெய்த கனமழையால் அங்குள்ள குடியிருப்புகளை சூழ்ந்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.
இதற்கிடையில் அருகிலிருந்த குளத்தின் தாழ்வான பகுதியில் இருந்தும் தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்ததன் காரணமாக அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து மழை நீடித்ததால் அச்சத்தில் வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்துள்ளனர். ஆனால் தெருவில் சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடியதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடமைகளை பாதுகாக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
தகவல் அறிந்து பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரப்பர் படகு மூலம் தண்ணீரில் தத்தளித்த பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பலரது வீடுகளில் முற்றிலும் தண்ணீர் புகுந்ததால் அவர்கள் அனைவரும் அங்கு வசித்த பாதுகாப்பாக படகு மூலம் வெளியேற்றப்பட்டனர்.
குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 40 பேர் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டு அருகில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அருகிலுள்ள மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். தற்போது பத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
மாவட்ட திட்ட இயக்குனர் பழனி சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பகுதியில் குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறாமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டம் முழுவதுமே தொடர் மழை பெய்து வருகிறது. இதேபோல் நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் சாலை முழுவதும் மழைநீர் தண்ணீர் குளம் போது தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி சென்றனர்.
மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சம் பாளையங்கோட்டையில் 90 மிமீ மழையும், நெல்லை மாநகரில் 64 மிமீ மழையும், சேரன்மகாதேவியில் 53 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 5 தினங்களுக்கு நெல்லை உள்பட தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முதல் நாள் மழைக்கே நெல்லையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu