நெல்லையில் வெளுக்கும் மழை.. நிரம்பும் நீர்நிலைகள்..!

நெல்லையில் வெளுக்கும் மழை.. நிரம்பும் நீர்நிலைகள்..!
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏரி, குளம், அணை உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. அம்பை, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

அணைகளை பொறுத்தவரை, நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நம்பியாறு அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 93.40 அடியையும், சேர்வலாறு அணை 107.87 அடியையும் எட்டியுள்ளது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 1132 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 104 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 64.20 அடியாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் நீர் இருப்பு 76 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் 8 அடி நீர் உயர்ந்தால் அணை நிரம்பிவிடும். அந்த அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 73.50 அடியாக உள்ளது. அங்கு 216 கனடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.28 அடியாக உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இருப்பதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுத்துள்ளனர். மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனர்.

மழை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கர்நாடக மாநிலம், கேரளா மாநிலம் ஆகிய பகுதிகளில் வரும் 20-ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் உள்ள மக்கள், மழை பெய்யும்போது பாதுகாப்பான இடங்களில் தங்கவும், தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags

Next Story