தென்மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தென்மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

குளம்போல் காட்சியளிக்கும் பாபநாசம் அணை.

அணைகள் வறண்டு போவதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

வறட்சியின் பிடியில் பாபநாசம் அணை: கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாயத்துக்கும், குடிநீர்த் தேவை க்கும் ஆதாரமான 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நேற்று 19 அடியாக நீர்மட்டம் சரிந்தது. இதில் பாதிக்கு மேல் சேறு போக , ஒரு குளத்தின் அளவுக்கே தண்ணீர் தேங்கியிருக்கிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் முக்கிய நீராதாரமாக இருக்கும் பாபநாசம் அணை வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட இந்த அணையின் நீர் இருப்பு நேற்று 19 அடிக்கும் கீழாக இருந்தது.

தாமிரபரணி பாசனத்தில் தலையானது பாபநாசம் அணைக்கட்டு. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட இந்த அணையின் கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி. பாபநாசம் மலையில் ஆங்கிலேயர் காலத்தில் 1942-ல் இந்த அணை கட்டப்பட்டது. அணை கட்டப்படும் முன் பாணதீர்த்த அருவி, கவுதலையாறு, பாம்பாறு, மயிலாறு போன்ற ஆறுகளில் இருந்து வந்த தண்ணீர் ஒன்றிணைந்து தாமிரபரணியாக ஓடிக்கொண்டிருந்தது. அணை கட்டப்பட்டபின் மேற்கண்ட ஆறுகளின் தண்ணீர் அணையில் சேகரமானது.

பாபநாசம் அணை மேலணை, கீழணை என்று இரு பிரிவாக கட்டப்பட்டுள்ளது. இரு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ளது மேலணை. இதில் 120 அடி வரை தண்ணீரை தேக்கலாம். 1944-ம் ஆண்டிலிருந்து மேலணையிலிருந்தும், கீழணையிலிருந்தும் 4 யூனிட்கள் மூலம் மொத்தம் 28 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

86,107 ஏக்கர்: பாபநாசம் அணையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணையில் பருவமழை காலங்களில் தண்ணீர் பெருகி கடல்போல் காட்சியளிக்கும். இந்த அணை நிரம்பி வழிந்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார், பிசான சாகுபடி நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்படும்.

இதுபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணையிலிருந்து தாமிரபரணியில் திறந்துவிடப்படும் தண்ணீர் இருந்து வருகிறது. மழைக் காலங்களில் கடல்போல் காட்சியளிக்கும் பாபநாசம் அணை இந்த கோடையில் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 70 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 18.55 அடியாக காட்சியளிக்கிறது.

குடிநீர் பற்றாக்குறை: நீர்மட்டம் வெகுவாக குறைந் துள்ளதால், அணையின் உட்புறம் சிறிய குட்டைபோல் தண்ணீர் தேங்கியிருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகள் சேறும் சகதியுமாக மாறிக்கொண்டிருக்கிறது. உள்ளேயிருக்கும் மரங்கள் வெளியே தலைகாட்டுகின்றன. பாபநாசம் அணை வறண்டுவருவது நடப்பு கோடை பருவத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Tags

Next Story