போலீஸ்காரரிடம் ரூ. 7.50 லட்சம் நுாதன மோசடி; இருவர் கைது
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்.
மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் படையைச் சேர்ந்த தளவாய் என்பவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த வழக்கில், வெளிநாட்டவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது இணையதள பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், இணையதள குற்றமும் அதிகரித்து வருகிறது. இது போன்ற குற்றங்களை தடுக்க சைபர் க்ரைம் போலீஸ் மூலம் புகார் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், சில நேரங்களில் போலீசாரும் பாதிக்கப்பட்டு விடுகின்றனர். அவ்வாறு ஒரு நிகழ்வு, திருநெல்வேலி மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் படையில் நிகழ்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் படையைச் சேர்ந்த தளவாய் என்பவரது 'வாட்சப்' எண்ணிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, உயர் அதிகாரி அனுப்புவதுபோல் பரிசு கூப்பன் அனுப்பச் சொல்லி செய்தி அனுப்பப்பட்டு, அதன் மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.
இது சம்பந்தமாக திருநெல்வேலி மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தென்மண்டல போலீஸ் ஜ.ஜி மற்றும் நெல்லை சரக போலீஸ் டிஐஜி உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி சரவணன் மேற்பார்வையில் இவ்வழக்கின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர்கள் ராஜ், சந்திரமோகன், எஸ்.ஐ ராஜரத்தினம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 23.08.2022ம் தேதி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஆந்திரா, சித்தூரைச் சேர்ந்த முரளி(41) மற்றும் வினய்குமார்(35) ஆகியோர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவர்களை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு வழக்கிலும், இவ்வழக்கிலும் ஒரே மாதிரியாக மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்ததால், அவ்வழக்கில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன்சோகாசர் (32) மற்றும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஸ்டான்லி(40) ஆகியோர் பெங்களுருவில் இருந்து இம்மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததால், ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் பெங்களூரு சென்று இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் ATM கார்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu