தூத்துக்குடி - மும்பை விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.யிடம் மனு!

தூத்துக்குடி - மும்பை விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.யிடம் மனு!
X

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்.

தூத்துக்குடி- மும்பை இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் பிரமநாயகம், துணைத் தலைவர் அந்தோணி முத்துராஜா, நிர்வாக செயலாளர் ஆனந்தன் ஆகியோர் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினர் அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:

தூத்துக்குடி- சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள் தூத்துக்குடி மாநகர பயணிகள் வசதிக்காக வாங்கிக் கொடுத்தமைக்கு பயணிகள் நலச்சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையம் செல்லும் சாலை மிகக் குறுகலாக உள்ளது. ஆதலால் கூடுதல் சாலை வசதி அமைத்துத் தர விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். தீபாவளி பண்டிகைக்கு தூத்துக்குடி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும். அதிகாலையில் தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக போடிநாயக்கனூருக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும்.

ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் மூன்று முறை ரயிலை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள வண்டி எண் 16791-16792 திருநெல்வேலி -பாலக்காடு -திருநெல்வேலி 'பாலருவி விரைவு ரயிலை' உடனடியாக தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும்.

நன்றாக இயங்கி பயணிகளின் வரவேற்பை பெற்ற மும்பை - தூத்துக்குடி வாராந்திர விரைவு ரயிலை உடனடியாக மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி- சென்னை இடையே "வந்தே பாரத் சாதாரண எக்ஸ்பிரஸ்" ரயிலை இயக்க ரயில்வே போர்டுக்கு பரிந்துரை செய்ய வேண்டுகிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture