உடன்குடி தூய்மை பணியாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் இருவர் கைது

உடன்குடி தூய்மைப் பணியாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் தி.மு.க. பெண் நிர்வாகிக்கு பணம் உதவி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உடன்குடி புதுக்காலனியைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர் சுடலைமாடன் கடந்த 17.03.2023 அன்று விஷமருந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 23.03.2023 அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுடலைமாடன் மனைவி தங்கம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில், தி.மு.க.வைச் சேர்ந்த உடன்குடி முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசி மற்றும் உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் ஜாதி பெயரை கூறி திட்டி கொடுமைப்படுத்தியதால் தனது கணவர் விஷமருந்திவிட்டதாகவும், தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டியதாகவும் தெரிவித்து இருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீஸார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜா வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடனடியாக விசாரணை மேற்கொண்டு வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவுப்படி, காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், உடன்குடியைச் சேர்ந்த ஆயிஷா கல்லாசி (62), உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பாபு, ஆயிஷா கல்லாசி மகன் அஷாப், ஆயிஷா கல்லாசி மருமகள் ஹூமைரா பாத்திமா ஆகியோர் சுடலைமாடனை தற்கொலைக்கு தூண்டியதாக தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்வதற்காக போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருப்பதற்கு அவர்களுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. அவர்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உடன்குடி திசையன்விளை ரோட்டைச் சேர்ந்த ஜெபசிங் (52) என்பவர் உதவி செய்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. அதாவது, ஜெபசிங் தனது வங்கிக் கணக்கில் ரூ. 50 ஆயிரம் செலுத்தி தனது ஏ.டி.எம். கார்டை அவர்களுக்கு கொடுத்து பண உதவி செய்தது தெரியவந்தது.

மேலும் அதே ஏ.டி.எம். கார்டு மூலம் அவர்கள் பணத்தை எடுத்துக் கொள்வதற்காக முத்தையாபுரத்தைச் சேர்ந்த செய்யது சிராஜூதீன் (36) என்பவரும் உடன்குடியில் இருக்கும் ஜெபசிங் என்பவரது வங்கி கணக்கின் மூலம் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் குலசேகரப்பட்டினம் காவல் ஆய்வாளர் ரகுராஜன் மற்றும் போஸாசார் இருவரையும் கைது செய்தனர்.

போலீஸாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருப்பவர்களுக்கு பணம் கொடுத்து உதவியதாக ஜெபசிங் மற்றும் செய்யது சிராஜூதீன் மீது வழக்குப் பதிந்த போலீஸார் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

தூய்மைப் பணியாளர் சுடலைமாடன் தற்கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story