தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ் குவிப்பு...

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விசைப்படகு மீனவர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன. இதில், விசைப்படகு மீனவர்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்புவது வழக்கம். தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றன.
விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு கிடைக்கும் லாபம் மற்றும் நட்டத்தில் விசைப்படகு உரிமையாளர்களுக்கு 61 சதவீதமும், மீன் பிடி தொழிலாளர்களுக்கு 39 சதவீதமும் என பங்குத் தொகை பிரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தங்களுக்கான பங்குத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என மீன்பிடி தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விசைப்படகு உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கடனுக்காக மீன்பிடி தொழிலாளர்களின் பங்குத் தொகையில் இருந்து கந்துவட்டி போல் பத்து சதவீதம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மீன்பிடித் தொழிலாளர்கள் தாங்கள் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீன்வளத் துறை அதிகாரிகளிடம் மீன்பிடி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், மீன்வளத்துறை அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இன்று இரவு திடீரென விசைப்படகு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தர்மபிச்சை மற்றும் ஜவகர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நாளை அதிகாலை கடலுக்கு செல்வதற்கான ஆயத்தப் பணிகளிலும் ஈடுபடாமல் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன்வளத்துறை உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தங்களிடம் இருந்து விசைப்படகு உரிமையாளர்கள் அடாவடியாக பணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மேலும், அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாக்கம் காவல்துறையினர் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu