அதிசயம்...ஆனால் உண்மை: ஆழ் துளை கிணற்றில் இருந்து வருகிறது பால்

அதிசயம்...ஆனால் உண்மை: ஆழ் துளை கிணற்றில் இருந்து வருகிறது பால்
X

ஆழ்துளை கிணற்றில் இருந்து பால் போன்ற வெண்மையுடன் வரும் தண்ணீர்.

ஶ்ரீவைகுண்டம் அருகே விவசாயி தோட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து பால் போன்று தண்ணீர் வரும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவருக்கு சொந்தமான கிணறு மற்றும் தோட்டம் சேரகுளம் அருகே உள்ள தீராத்திகுளத்தில் உள்ளது. கிணற்று பாசனம் மூலம் வாழை மற்றும் தென்னை, பருத்தி விவசாயம் செய்து வருகிறார். இதற்காக இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் வரும் தண்ணீரை கிணற்றில் விட்டு, அதன் பின் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் இறைத்து தண்ணீர் பாய்த்து வருகிறார்.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பருவமழை முறையாக பெய்யாத காரணத்தினால் தற்போது தென்னை மற்றும் பருத்தி பயிரிட்டுள்ளார். இவர் தினமும் சென்று தண்ணீர் இறைத்து தோட்டத்தில் பாய்ப்பது வழக்கம். தற்போது மழை இல்லாத காரணத்தினால் கிணற்றில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வீட்டில் இருந்து கிணற்றிற்கு சென்று தண்ணீர் பாய்க்க சென்றுள்ளார். அதற்காக இரண்டு ஆழ்துளை போரையும் போட்டுள்ளார். அப்போது அதில் ஒரு ஆழ்துளை போரில் இருந்து வரும் தண்ணீர் பால் போல் வெள்ளை நிறத்தில் வந்துள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த பால்பாண்டி அருகில் உள்ள மற்றொரு போர் தண்ணீரை பார்த்துள்ளார்.

ஆனால் அந்த போரில் வந்த தண்ணீர் சரியான தண்ணீர் போன்றே வந்துள்ளது. மேலும் சந்தேகமடைந்த பால்பாண்டி அருகில் இருந்த மற்றொரு விவசாயியின் போரை பார்த்துள்ளார். அங்கு தண்ணீர் சரியாக வந்துள்ளது.

இதற்கிடையில் கடந்த ஒரு வார காலமாக ஒரு போர் தண்ணீர் மட்டும் பால் நிறத்தில் வந்துள்ளது. இதனால் அந்த தண்ணீர் கிணற்றில் விழுந்து கிணற்று தண்ணீர் அனைத்தும் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது.

விவசாயப்பகுதி என்பதால் அந்த பகுதியில ஏராளமான மயில்கள் உள்ளது. அந்த மயில்கள் இந்த கிணற்று அருகில் உள்ள தொட்டியில் கிடக்கும் தண்ணீரை குடிக்கும். தற்போது கிணற்று தண்ணீர் நிறம் மாறியுள்ளதால், அதிர்ச்சி அடைந்த விவசாயி பால்பாண்டி தொட்டியில் தண்ணீர் நிரப்ப அச்சப்படுகிறார்.

இதுகுறித்து விவசாயி பால்பாண்டி கூறும்போது கடந்த வருடமும் இதே போல் இரண்டு நாட்கள் இந்த போரில் இதே போல் பால் நிறத்தில் தண்ணீர் வந்தது. அதன் பின்னர் முறையாக மழை பெய்யவில்லை. இந்த வருடமும் அதே போல் தண்ணீர் நிறம் மாறியுள்ளது. எனவே இது வறட்சிக்கான அறிகுறியாக இருக்கும் என்று அச்சப்பட வைக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனே ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயி பால்பாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story