சமையல் கேஸ் இணைப்பில் பிரச்னையா? தூத்துக்குடியில் ஆக. 30 இல் குறைதீர் கூட்டம்

(கோப்பு படம்)
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் சமையல் கேஸ் இணைப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து நுகர்வோரிடம் கேட்டறியப்பட்டு சரி செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 30.08.2023 அன்று முற்பகல் 11.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
சமையல் எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளித்திடலாம். இந்தக் கூட்டத்தில் பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாமல் இருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் தெரிவிக்கலாம்.
எனவே, பொதுமக்கள் இந்தக் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu