தூத்துக்குடி டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தல்..!

தூத்துக்குடி டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தல்..!
X

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வல்லநாடு பாலம் சரி செய்யப்படும் வரை வாகைக்குளம் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சமத்துவ மக்கள் கழக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமத்துவ மக்கள் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி தேவர்புரம் சாலையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார்.

மாநில பொதுச் செயலாளர் காமராசு நாடார், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் வரவேற்புரை ஆற்றினார். சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தின்போது, கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பனைமர விதைகளை, பனைமர தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் நட்டு, உலகசாதனை பட்டியலில் இடம் பெற்ற சமத்துவ மக்கள் கழக தலைவர், பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் மேல்பகுதி தரைதளத்தை முழுமையாக அகற்றி புதிதாக தரமான கான்கிரீட்தளம் போட்டு பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் அதுவரை வாகைகுளம் டோல்கேட்டில் வாகனங்களுக்கு கட்டண வசூலை நிறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், உப்பளங்களுக்கு வழங்கப்படும் மின்சாரமானது தொழிற்சாலைகளுக்குரிய மின்கட்டண விகிதம் வசூலிக்கப்படுகிறது. உப்புத் தொழிலை பாதுகாத்து மேம்படுத்த உப்பளத்திற்கு விவசாய தொழிலாளக்கருதி விவசாயத்திற்குறிய மின் கட்டணமாக மாற்றி வழங்க வேண்டும் என தமிழக அரசையும் தமிழ்நாடு மின்சார வாரியத்தையும் கேட்டுக்கொண்டும், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுதல் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?