உழக்குடியில் மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

உழக்குடியில் மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு
X

உழக்குடியில் மாநில தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், உழக்குடியில் மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள உழக்குடியில் ஏராளமான தொல்லியல் சின்னங்கள் காணப்படுவதாகவும், அதை முறையாக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதே பகுதியைச் சேர்ந்த ஆய்வு மாணவர் ஆறுமுக மாசான சுடலை கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையில் செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரை அருகில் உழக்குடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு நினைவுச் சின்னங்கள், கல் வட்டங்கள், இரும்பு உருக்கும் பட்டறைகள் உள்பட ஏராளமான தொன்மை வாய்ந்த பொருள்கள் இருக்கிறது.

மேலும், உழக்குடி கிராமத்தில், கி.மு.1000 முதல் கி.மு 300 வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அரசர்கள் மற்றும் தலைவர்களை அடக்கம் செய்வதற்காக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களும் அங்கு உள்ளன. எனவே இங்கு தொல்லியல் ஆராய்ச்சியை நடத்தினால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்களின் பல்வேறு தகவல்கள் கிடைக்க பெறும் என்று கூறியிருந்தார்.

அந்த மனு கடந்த 30.07.2022 அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் தெரிவிக்கும் பகுதியில் ஏற்கெனவே ஆராய்ச்சி செய்ததில், அந்த பகுதி முழுவதும் கடுமையாக சேதம் அடைந்து கிடைக்கிறது. எனவே அங்கு அகழாய்வு நடத்துவதால் எந்த பலனும் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உழக்குடி பகுதியில் முதல் கட்ட ஆராய்ச்சியில் பழமையான தொன்மையான பல்வேறு தடயங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இதையடுத்து மாநில அரசு உழக்குடி பகுதியில் தொல்லியல் அகழாய்வை மேற்கொள்ளவும், அந்தப் பகுதியை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இந்த நிலையில் தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம், தமிழக அரசின் தொல்லியல் கல்வியியல் ஆலோசகர் ராஜன் ஆகியோர் உழக்குடியில் தொல்லியல் சின்னங்களை இன்று பார்வையிட்டனர்.

அவர்கள் கல்வட்டம், 14 அடி உயரம் கொண்ட குத்துக்கல், முதுமக்கள் தாழிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அவருடன் ஆய்வாளர்கள் காளிஸ்வரன், ஹரிகோபாலகிருஷ்ணன், ஆய்வு மாணவர் ஆறுமுக மாசான சுடலை ஆகியோர் உடனிருந்தனர்.

அடுத்த ஆண்டு தமிழக தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் ஆய்வில் புதிய இடமாக இந்த உழக்குடி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சமூக ஆர்வர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story