கோவில்பட்டியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி நீர்த்தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் போராட்டம்

கோவில்பட்டியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி நீர்த்தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் போராட்டம்
X

கோவில்பட்டி அருகே உருளைகுடி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

கோவில்பட்டி அருகே முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோடைகாலம் என்பதால் தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில கிராமங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், குடிநீர் வழங்காதைக் கண்டித்து கிராம மக்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கோவில்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உருளைகுடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.


கடந்த இரண்டு மாத காலமாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை சுத்தம் செய்து நான்கு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதாகவும், அந்த குடிநீரை பயன்படுத்தினால் தொற்று பரவுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

மேலும், குடிநீர் தட்டுப்பாடு குறித்து திமுக ஊராட்சி மன்ற தலைவர் பீக்கிலிபட்டி முருகேசன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கதால் கிராம மக்கள் இன்று திடீரென மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் முறையாக செயல்பட்டு உருளைகுடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story