தூத்துக்குடி அருகே தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை
தற்கொலை செய்துக் கொண்ட தலைமைக் காவலர் கொடிவேல்.
தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் கொடிவேல். இவர் புளியம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த தலைமைக் காவலர் கொடிவேல் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட தலைமை காவலர் கொடிவேல் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொடிவேல் தற்கொலை குறித்து புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். தலைமைக் காவல் தற்கொலை சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனும் தகவல்களை கேட்டறிந்து உள்ளார்.
காவலர் குடியிருப்பில் தலைமை காவலர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்பப் பிரச்னை காரணமாக தலைமைக் காவலர் கொடிவேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே காவல் துறையில் பணியாற்றுவோர் தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மன அழுத்தம் காரணமாகவே இந்த தற்கொலை சம்பவங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது. எனவே, காவல் துறையினருக்கு தொடர்ந்து மனஅழுத்தத்தில் மீள்வது குறித்த பயிற்சி வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu