தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை
X

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட அந்தோணியம்மாள்.

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், போலீசாரின் அலட்சியம் காரணமாக கொலை நடந்துள்ளதாக தமிழ் புலிகள் கட்சி குற்றம்ச்சாட்டியுள்ளது.

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்த கனி மனைவி அந்தோணியம்மாள். கணவர் கனி மற்றும் மகன் இறந்துவிட்ட நிலையில், 68 வயதான மூதாட்டி அந்தோணியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டைவிட்டு வெளியே வராத நிலையில், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையெடுத்து அந்த பகுதிக்கு சென்ற வடபாகம் காவல்துறையினர் அந்தோணியம்மாள் வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்தபோது மூதாட்டி அந்தோணியம்மாள் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். மேலும், அவரது கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போயிருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடரந்து, கொலையுண்ட அந்தோணியம்மாள் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த இடத்தில் தடயவியல் காவல்துறையினர் அந்தோணியம்மாள் வீட்டில் சோதனை செய்யும் போது வீட்டிற்கு வெளியே பித்தளை தோடுகளை அந்த கும்பல் வீசி சென்று இருப்பது தெரியவந்தது. தனியாக வசித்து வந்த அந்தோணியம்மாளின் வீட்டில் ஏற்கெனவே இரண்டு முறை கஞ்சா போதை கும்பல் ஐந்து பவுன் நகை மற்றும் பொருட்களை திருடியதுடன் அவரது வீட்டின் உள்ளே புகுந்து மது குடித்த சம்பவம் நடந்துள்ளது.

இது சம்பந்தமாக இரண்டு முறை அந்தோணியம்மாள் அந்த பகுதி பெரியவர்களுடன் இணைந்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறை இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே கொலை நடந்து இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து தமிழ் புலிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கத்தார் பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கஞ்சா போதை கும்பல் நேற்று வீட்டில் தனியாக இருந்த அந்தோணியம்மாளை கொடூரமாக கொலை செய்து அவர் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளனர். காவல்துறையின் அலட்சியம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. போலீசார் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் புலிகள் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் கத்தார் பாலு தெரிவித்தார்.

Next Story
ai in future agriculture