அடிப்படை பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு-சரண்யா அரி
![அடிப்படை பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு-சரண்யா அரி அடிப்படை பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு-சரண்யா அரி](https://www.nativenews.in/h-upload/2021/02/08/938730-20210208110830.webp)
தூத்துக்குடி மாநகராட்சியின் அடிப்படை பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என புதிய ஆணையர் சரண்யா அரி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெயசீலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சார் ஆட்சியராக பணியாற்றி வந்த சரண்யா அரி, தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக இன்று காலை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,பொதுமக்கள் தங்கள் குறைகள் தொடர்பாக எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்பேன். தூத்துக்குடி மாநகரின் மழைநீர் வடிகால் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்றார்.புதிய ஆணையர் சரண்யா அரி சென்னையைச் சேர்ந்தவர். தஞ்சாவூரில் பிறந்தவர். அவரது தந்தை அரிவாசகன் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி. தாய் சத்யா பிரியா அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் . இவரது கணவர் ஐ.பி.எஸ். விவேஷ் பி சாஸ்திரி ஆவார்.
சரண்யா அரி, கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தில் உதவி செயலாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு அம்பத்தூரில் சார் ஆட்சியராக பொறுப்பேற்றார். பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் துணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது தூத்துக்குடி மாநகராட்சியின் 19வது ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.