தண்ணீர் பிரச்சினையால் சிக்கல்: நகராட்சி ஆணையரிடம் விக்கலுடன் மனு

தண்ணீர் பிரச்சினையால் சிக்கல்: நகராட்சி ஆணையரிடம் விக்கலுடன் மனு

தென்காசி நகராட்சி ஆணையாளரிடம் நகர்மன்ற உறுப்பினர் முகமது ராசப்பா மனு அளித்தார்.

தென்காசி நகர் பகுதியில் சீரான குடிநீர் கேட்டு நகர்மன்ற உறுப்பினர் முகமது ராசப்பா தலைமையில் பொதுமக்கள் ஆணையாளரிடம் மனு அளித்தனர்

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு பகுதியில் தண்ணீர் பிரச்சினையால் தவித்து வரும் பொதுமக்கள், தங்களது குடிநீர் சிக்கலை உணர்த்தும் வகையில் விநோதமான முறையில் ஆணையரிடம் விக்கலுடன் மனு அளித்தனர்

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி உட்பட்ட வார்டு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு பகுதியில் ஒரு மாத காலமாக குடிநீரானது முறையாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த 10வது வார்டு பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் முகமது ராசப்பா அப்பகுதி மக்களுடன் சேர்ந்து நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தார்.


இந்த கோரிக்கை மனுவில் தங்களது வார்டு பகுதிகளில் ஒரு மாத காலமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை, இதனால் பொதுமக்கள் தண்ணீர் சிக்கலால் விக்கல் எடுத்து தவிக்கின்றனர் என மனு அளித்தார். தண்ணீர் சிக்கலை உணர்த்தும் வகையில், நகர்மன்ர உறுப்பினர் முகமது ராசப்பாவுடன் இணைந்து பொதுமக்கள் அனைவரும் விக்கல் எடுத்தவாறு ஆணையரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் விக்கலுடன் வந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கி தாகத்தை தணித்ததோடு, உங்கள் பகுதியிலும் தண்ணீர் சிக்கல் தீர்க்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags

Next Story