ஊழியரிடம் லஞ்சம் கேட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர் கைது

ஊழியரிடம் லஞ்சம் கேட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர் கைது
X

 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட ஸ்ரீனிவாசன்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, ராமசுப்பிரமணியன் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை ஸ்ரீனிவாசனிடம் கொடுத்தார்

ஊழியரிடம் லஞ்சம் கேட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருபவர் ராமசுப்பிரமணியன்.

இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த பணியாளராக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது பணி நிரந்தரம் பெற்று குற்றாலம் குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய போது இவருக்கு வழங்க வேண்டிய அரியர் தொகையான ரூ.3 லட்சத்து, 93 ஆயிரத்து 700 ரூபாயை வழங்குவதற்காக, குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சீனிவாசன் ( 50) என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

அதற்கு, ராமசுப்பிரமணியன் தன்னிடம் பணம் இல்லை எனவும், தன்னுடைய குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது. ஆகையால் தனக்கு சேரவேண்டிய தொகையை கிடைக்கச்செய்தால் பெரும் உதவியாக இருக்கும் என ஸ்ரீனிவாசனிடம் பலமுறை கெஞ்சி கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் கொடுத்தால் மட்டுமே பணம் கைக்கு கிடைக்கும் என அதிகார மமதையுடன் பல நாட்களாக கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், ராமசுப்பிரமணிய,ன் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ராமசுப்பிரமணியன் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை லஞ்சமாக ஸ்ரீனிவாசனிடம் கொடுத்துள்ளார்.

அப்பொழுது, மறைந்திருந்த தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான 6 பேர் கொண்ட போலீசார் ரசாயணம் தடவிய நோட்டுகளுடன், ஸ்ரீநிவாசனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கே, அவருக்கு சொந்தமான பணத்தை கொடுப்பதற்காக உயர் அதிகாரி லஞ்சம் கேட்டு கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., இதே போன்று பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்த ஆடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் புகார் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai tools for education