தென்காசி நகராட்சியில் சாக்கடையை கைகளால் சுத்தம் செய்யும் அவலம்; வைரல் வீடியோவால் பரபரப்பு
தென்காசி நகராட்சியில், கழிவு நீரோடையை கையால் சுத்தம் செய்த ஒப்பந்த துப்புரவு பணியாளர் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
HIGHLIGHTS

தென்காசி 32 வது வார்டு பகுதியில் அடைப்பு ஏற்பட்ட சாக்கடையை, கையால் சுத்தம் செய்யும் பணியாளர்.
தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இச்சூழலில், வளர்ந்து வரும் நகராட்சியான தென்காசி நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன. நகராட்சிகளில் உள்ள வார்டுகளில் கழிவு நீரோடைகளை சுத்தம் செய்வதற்கு போதிய உபகரணங்கள் இல்லை என கூறப்படுகிறது.
குறிப்பாக, இன்று தென்காசி நகராட்சியில் உள்ள 32 -வது வார்டு பகுதியில் கழிவு நீரோடைகளில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரை தொடர்ந்து, ஒப்பந்த துப்புரவு பணியாளர் ஒருவர் அந்த பகுதிக்கு சென்று கழிவு நீரோடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை கையால் சுத்தம் செய்துள்ளார்.
இதை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர், அதனை வீடியோவாக பதிவிட்டு, தற்போது சமூகவலை வைரலாகி உள்ளது.
இந்தச் சூழலில், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஒரு நபர் கையால் கழிவு நீரோடைகளை சுத்தம் செய்யும் அவலம் இந்த காலத்திலும் நடக்கிறதா? இதற்கு விடிவே இல்லையா? விடியல் ஆட்சி என்று கூறும் திமுக அரசு என்னதான் செய்கிறது என வலைதள வாசிகள், தற்போது இந்த வீடியோவை பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளனர்.