பட்டா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி: பஞ்சாயத்து தலைவர் மீது புகார்
பட்டா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதாக பஞ்சாயத்து தலைவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS

பஞ்சாயத்து தலைவர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்த உமாமகேஸ்வரி.
தென்காசி மாவட்டம், முள்ளிகுளத்தை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற முள்ளிகுளம் பஞ்சாயத்து தேர்தலில் முருகன் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் தற்போது முருகன் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதியிடம் உமாமகேஸ்வரி புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தான் முள்ளிக்குளம் பஞ்சாயத்து தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் முருகன் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இதனால் பஞ்சாயத்து தலைவர் முருகன் முன்விரோதம் காரணமாக தனக்கு சொந்தமான நிலத்தில், வாறுகால் அமைப்பதாக கூறி பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமிப்பு செய்வதாகவும், முள்ளிகுளம் பஞ்சாயத்து தலைவர் பொது பிரச்சினையை காவல்துறையினருடன் வந்து பேச்சுவார்த்தை நடத்திய போது அதை வீடியோவாக எடுத்து பஞ்சாயத்து தலைவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தான் தேர்தலில் தோற்றுப் போனதால் தன்னை தொந்தரவு செய்வதாகவும் அடியாள் வைத்து மிரட்டதாகவும் சித்தரித்துள்ளதாகவும் பஞ்சாயத்து தலைவரின் கண்ணியம் இல்லாத இந்த செயலால் தங்களுடைய குடும்ப பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக பட்டா நிலத்தை பஞ்சாயத்து தலைவர் அபகரிக்க முயற்சிப்பதாக பெண் அளித்துள்ள புகாரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.