தென்காசியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தென்காசியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் காவல்துறை முன்னிலையில் கூட்டம் நடைபெறுவதாகவும் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் அனைத்து வட்டார பகுதிகளில் இருந்தும் விவசாயிகளும், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர் கூட்டத்தில் விவசாயம் சார்ந்த குறைகள் மட்டுமே தீர்க்கப்படும் என கூட்டத்தில் கூறப்பட்ட நிலையில், ஆவேசம் அடைந்த விவசாயிகள், இது விவசாயிகள் குறைதீர் கூட்டம். எனவே விவசாயிகள் கூறும் குறைகளை தீர்க்க வேண்டும் எனவும், இல்லை எனில் இது விவசாயம் குறைவீர் கூட்டம் என பெயர் மாற்றம் செய்யுங்கள் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் தலைமையில், பத்துக்கு மேற்பட்ட காவலர்கள் கட்டுப்பாட்டில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மேலும் காவல்துறையினர் அச்சுறுத்தும் வகையில், விவசாயிகளை கோரிக்கைகளை கூற விடாமல் தடுத்ததாக, விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து பேசிய விவசாயி ஒருவர், தனது தந்தை உடப்பன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி கரும்பு விவசாயம் செய்து வந்துள்ளார். கரும்பு அறுவடை செய்த பயிர்களை தரணி சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் வரக்கூடிய காசோலைகள், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் அதிகாரிகள் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் 2014ல் வாங்கப்பட்ட கடன் தற்போது 2021 ஆண்டு திமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தரணி சர்க்கரை ஆலை வாயிலாக வரவு வைக்கப்பட்டு வந்த காசோலைக்கான தொகை திரும்ப வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.