தென்காசியில் திமுக வெற்றி: 7 -வது முறையாக தோல்வியை சந்தித்த கிருஷ்ணசாமி

தென்காசியில் திமுக வெற்றி: 7 -வது முறையாக தோல்வியை சந்தித்த கிருஷ்ணசாமி

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் சான்றிதழ் வழங்கினார்.

தென்காசியில் 7-வது முறையாக போட்டியிட்டு தோல்வியை தழுவிய புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி.

பாராளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவானது தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 45 நாட்களுக்குப் பிறகு வாக்கு எண்ணும் பணியானது நேற்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்திலும், பாஜக சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியனும், திமுக சார்பில் ராணி ஸ்ரீ குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் இசை மதிவாணன் உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், தேர்தலின் போது பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்றது.

குறிப்பாக, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட்டன.

குறிப்பாக, ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்கினை தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்த நிலையில், ஆரம்ப முதலே திமுக வேட்பாளரான ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகித்து வந்தார்.

இந்த நிலையில், தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் முழுமையாக எண்ணப்பட்டுள்ள நிலையில், திமுக வேட்பாளரான ராணி ஸ்ரீ குமார் 4,25,679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

குறிப்பாக, அதிமுக வேட்பாளரான கிருஷ்ணசாமி 2,29,480 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜான் பாண்டியன் 2,08,825 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசைமதிவாணன் 1,30,335 வாக்குகளும் பெற்றுள்ள நிலையில், திமுக வேட்பாளரான ராணி ஸ்ரீகுமார் 1,96,199 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற ராணி ஸ்ரீகுமாருக்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோர் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட புதிய தமிழக கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 7-வது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள நிலையில், 2-வது இடம் பெற்றுள்ள அதிமுக வேட்பாளரான கிருஷ்ணசாமிக்கும், 3-வது இடம் பெற்றுள்ள பாஜக வேட்பாளரான ஜான்பாண்டியனுக்கும் இடையே 20655 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story