தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலை பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலை பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

விநாயகர் சதுர்த்தியையொட்டி தென்காசி செங்கோட்டை பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி.

தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலை பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு தென்காசியில் 1,200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவானது இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சூழலில், விநாயகர் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் காலை முதல் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 304 சிலைகள் வைக்க காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முதற்கட்டமாக 180 சிலைகள் அந்தந்த கோயில்களில் வைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள சிலைகள் இன்று வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலைக்கு ஒரு காவலர்கள் வீதம் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு பிரச்சினைக்குரிய பகுதிகளில் கூடுதல் காவலர்கள் பணியமத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் மாவட்டம் முழுவதும் போலீசார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

குறிப்பாக, மாவட்டம் முழுவதும் சுமார் 1,200 காவல்துறையினர் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சூழலில், நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது வெளி மாவட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பிரச்சனைக்குரிய பகுதிகளான செங்கோட்டை, பண்பொழி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் தேவைக்கேற்ப கூடுதல் காவல்துறையினர் நியமனம் செய்யப்பட்டு எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வண்ணம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story