சங்கரன்கோவில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
150 க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு சங்கரன் கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார் இருந்தது. இந்த சூழலில் இன்று தூய்மை பணியாளர்கள் அலுவலகத்தின் முன் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தினால் நகரில் பல இடங்களில் குப்பை அள்ளப்படாமல் சாலைகளில் கிடந்தது. காலையிலிருந்து இரண்டு மணி நேரமாக நடந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கூடிய விரைவில் தற்போது உள்ள ஒப்பந்ததாரரை நீக்கி விடுவதாகவும் தங்களுக்கு உரிய புதிய சம்பளத்தை தங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து துப்புரவு பணியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தப் போராட்டத்தினால் சங்கரன்கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போல் புளியங்குடி, கடையநல்லூர், செங்கோட்டை போன்ற நகராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு உரிய முறையில் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒப்பந்ததாரர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்பது பணி புரியும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu