புளியங்குடி சிந்தாமணி சொக்கலிங்க சாமி திருக்கோவிலில் குத்தகை நெல் மூட்டைகள் சேதம்

புளியங்குடி சிந்தாமணி சொக்கலிங்க சாமி திருக்கோவில்.
புளியங்குடி சிந்தாமணி சொக்கலிங்க சாமி திருக்கோவில் 200க்கும் மேற்பட்ட மூடைகள் பராமரிப்பின்றி முழுவதும் பயனற்றுப் போனது.
புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணியில் பிரசித்தி பெற்ற சொக்கலிங்கசாமி திருக்கோவில் உள்ளது.இந்தக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பயிர் செய்துவரும் விவசாயிகளால் குத்தகையாக வழங்கப்பட்ட நெல் மூடைகள் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இது முழுவதும் பதராகி பயன்பாடற்று வீணாகியுள்ளது. மேலும் நெல் மூடைகள் முழுவதும் எலிகளால் நாசம் செய்யப்பட்டும் வீணாகி உள்ளது. அதிகப்படியான எலிகள் நடமாட்டத்தால் கோவிலின் பெரும்பாலான பகுதிகள் எலிகளால் துளையிடப்பட்டு நாசம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் இந்த அலட்சியப்போக்கால் தினந்தோறும் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் வீணாகிப்போன இந்த நெல் மூடைகளை பார்த்து மனவேதனை அடைந்துள்ளனர்.
பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த நெல்மூட்டைகள் வீணாகிப் போனது குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி தீர்வு காணவேண்டும் என்றும் மேலும் இதுபோன்ற தவறுகள் இனிவரும் காலங்களில் எந்த கோவில்களிலும் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu