அதிக பாரங்களை ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: காவல்துறையினர் அதிரடி

அதிக பாரங்களுடன் கனிம வளங்களை வந்த கனரக வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், தமிழகத்தின் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக ஏராளமான சமூக அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்களுக்கு செவி சாய்க்காத மாவட்ட நிர்வாகம் கனிம வளங்கள் கேரளாவிற்கு அதிக அளவில் சட்டவிரோதமாக அதிக பாரங்களை ஏற்றிக் கொண்டு செல்வதை கண்டுகொள்ளாமல் இருந்தன.
இந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் சமூக வலைதளங்களில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பதிவுகள் வைரல் ஆகின.
அதனைத் தொடர்ந்து, மாலை முதல் தென்காசி டிஎஸ்பி நாகசங்கர் தலைமையிலான குழுவினர் செங்கோட்டை பிரானூர் பார்டர் பகுதியில் கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மறித்து சோதனையிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அதிக அளவு பாரங்களை ஏற்றிக்கொண்டு சட்டவிரோதமாக கனிம வள கடத்தலில் ஈடுபட்ட 8 லாரிகளை பறிமுதல் செய்து, லாரிக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ள சூழலில், கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu