ரியல் எஸ்டேட் அதிபரிடம் கொள்ளையடித்த ஆறு பேர் கைது

ரியல் எஸ்டேட் அதிபரிடம் கொள்ளையடித்த ஆறு பேர் கைது
X

 ரியல் எஸ்டேட் அதிபரிடம் கொள்ளை அடித்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்திருப்பதை படத்தில் காணலாம்

ஆலங்குளம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த ஆறுபேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்

தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரம் அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவர் கடந்த செப்டம்பர் மாதம் வேலை விஷயமாக ஆலங்குளம் வந்துள்ளார். தனது வேலையை முடித்துவிட்டு ஆலங்குளம் ஜோதிநகர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார்.

அங்கு மது வாங்கி கொண்டு அருகிலுள்ள காட்டு பகுதியில உட்கார்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது 3 பேர் விஜயன் அருகில் உட்கார்ந்து மது குடித்துள்ளனர். இதில் அவர்கள் நண்பர்களாகி மேலும் விஜயனை குடிக்க வைத்துள்ளனர்.

தொடர்ந்து அவரை காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்ற போது திடீரென மேலும் 3 பேர் வந்துள்ளனர். 6 பேரும் சேர்ந்து கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து விஜயன் கழுத்தில் வைத்துக் கொண்டு கழுத்தில் இருந்த 22 கிராம்செயின், கை செயின் 20 கிராம், மற்றும் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்த அவரது மகனின் 120 கிராம் வெள்ளி கொடி, 40 கிராம் எடை கொண்ட 2 வெள்ளி கை செயின், ரொக்கம் 60 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு அவரது மோட்டார் சைக்கிள் சாவியையும் எடுத்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்த தப்பியோடி விட்டது.

இச்சம்பவம் குறித்து விஜயன் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தன்னிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறியிருந்தார். அதன் பேரில் ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்

இந்நிலையில் விஜயன் தன்னுடன் சேர்ந்து மது குடித்த 2 பேருடன் தனது செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் அவரிடம் நகைகளை பறித்து சென்ற நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆலங்குளத்தை அடுத்துள்ள மாறாந்தையை சேர்ந்த அழகு சுந்தரம் (32), சூர்யா (25), பேச்சிமுத்து (24 ), நெல்லை மாவட்டம் அரிகேசவநல்லூரை சேர்ந்த சுதாகர் (19), வீரவநல்லூரை சேர்ந்த முருகேசன் (20 ), கள்ளத்தி குளத்தை சேர்ந்த மகேஷ் (28 ) ஆகிய ஆறு பேரும் கூட்டாளிகளாக சேர்ந்து விஜயனிடம் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது

அவர்கள் ஆறு பேரையும் கைது செய்த ஆலங்குளம் காவல்துறையினர் விஜயனிடமிருந்து பறித்தநகைகளை மீட்டு குற்றவாளிகள் அனைவரையும் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
why is ai important to the future