மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை! ராமநதி அணை நிரம்பியது

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை! ராமநதி அணை நிரம்பியது

ராம நதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை படத்தில் காணலாம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து ராமநதி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது

தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 84 அடி உச்சநீர் மட்டம் கொண்ட ராமநதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் ஐந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன . மேலும் 32 குளங்கள் மற்றும் கடையம் சுற்று வட்டார மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்த அணையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு அணை நிரம்பியது. தொடர்ந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த ஆண்டு தென்மேற்குபருவமழை தொடங்கியதில் இருந்து அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து இன்று அணை நிரம்பியது.

அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டம் 82 அடியில் நிலை நிறுத்தப்பட்டு அணைக்கு வரக்கூடிய 100 கன அடி தண்ணீர் உபரிநீராக ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் கால்நடை பராமரிப்பாளர்கள் ஆற்று பகுதிக்கு செல்பவர்கள் பாதுகாப்பாக சென்று வர பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தென்மேற்கு பருவமழையின் மூலம் இந்த ஆண்டு முதன்முறையாக ராமநதி அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story