சத்திரிய சான்றோர் படை என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் ஹரி நாடார்

சத்திரிய சான்றோர் படை என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் ஹரி நாடார்

ஆலங்குளத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஹரி நாடார்.

ராக்கெட் ராஜாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சத்திரிய சான்றோர் படை என்ற புதிய கட்சியை ஹரி நாடார் தொடங்கி உள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அப்பாவி மக்கள் பலர் இறந்துள்ளனர். இந்த கொடூர படுகொலைக்கு திமுக அரசு தான் காரணம் என்று சத்திரிய சான்றோர் படை என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய ஹரி நாடார் கூறினார்.

நடமாடும் நகைக்கடையாக அறியப்பட்டவர் ஹரி நாடார். சுமார் 3.5 கிலோ தங்க நகைகளை அணிந்து கொண்டு, அவர் வலம் வருவதைப் பார்க்க மக்கள் கூட்டம் அதிக அளவில் வந்ததுண்டு. ராக்கெட் ராஜாவுடன் இணைந்து பனங்காட்டுப்படை கட்சி நடத்தி வந்த ஹரி நாடார், 2021 இல் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 37,724 வாக்குகள் பெற்றிருந்தார். தேர்தலுக்குப் பின்னர் பல்வேறு வழக்குகளில் சிக்கி 3 ஆண்டுகளாக சிறையில் இருந்த ஹரி நாடார் அண்மையில் வெளிவந்தார். அவர் சிறையில் இருந்த போது ராக்கெட் ராஜாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வந்திருந்த ஹரி நாடார், ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும் சூடத்தை ஏற்றி ஆரத்தி எடுத்தும் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து ஆலங்குளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆலங்குளம் தொகுதி மக்கள் எனக்கு அரசியல் அங்கீகாரம் அளித்தனர். எனவே ஆலங்குளத்தில் வைத்து, சத்திரிய சான்றோர் படை என்ற பெயரில் தனது புதிய கட்சியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் கட்சிக் கொடி, நிர்வாகிகள் குறித்த விவரத்தை அறிவிப்பேன்.

நாடார்களின் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் வகையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கணிசமான எம்எல்ஏக்கள் வெற்றி பெறுவார்கள். சமுதாய இளைஞர்கள் பட்டிதொட்டியெங்கும் கட்சியின் பெயரை கொண்டு செல்வார்கள்.

இந்த புதிய கட்சியின் கொள்கைகளாக பனையிலிருந்து கள் இறக்க தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அப்பாவி மக்கள் பலர் இறந்துள்ளனர். இந்த கொடூர படுகொலைக்கு திமுக அரசு தான் காரணம். இதே கள் இறக்க அரசு அனுமதி அளித்திருந்தால் இது போன்ற கொடூர மரணங்கள் தடுக்கப்பட்டிருக்கலாம்.இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் ஆளும் ஆட்சியில் இருக்கும் மந்திரி,அமைச்சர்களின் சாராய வியாபாரம் குறைந்து விடும் என்பதற்காக தான் கள்ளை தடை செய்கின்றனர். அண்டை மாநிலங்களான ஆந்திரா, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகாவில் கள் விற்பனைக்கு உள்ளது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் விதி விலக்காக உள்ளது. அதனால் இது குறித்து சட்டமன்றத்தில் குரல் ஒலிக்க சத்திரிய சான்றோர் படை குரலாக ஒலிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று தெரிவித்தார்.

Tags

Next Story