கடையத்தில் சிறுதானிய பொங்கல் வைத்து கொண்டாட்டம்

கடையத்தில் சிறுதானிய பொங்கல் வைத்து கொண்டாட்டம்
X

 தென்காசி மாவட்டம், கடையத்தில் சிறுதானிய பொங்கல் வைத்து கொண்டாடிய  தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவினர்

மத்திய வேளாண் மற்றும் வெளியுறவு அமைச்சகம் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு கொண்டாட்ட முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம், கடையத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் சிறுதானிய பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

2023-ஆம் ஆண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்திருப்பது, உணவு சந்தையில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்பதுடன், அதனை பதப்படுத்துவதற்கும், சுழற்சி முறை பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும் வாய்ப்பாக அமையும் என மத்திய வேளாண் துறை தெரிவித்துள்ளது. மத்திய வேளாண் மற்றும் வெளியுறவு அமைச்சகம் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 கொண்டாடங்களின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று, 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா சபை அறிவித்திருப்பதாகவும், உலக நாடுகளில் சிறுதானிய பயன்பாட்டை அதிகரிப்பதே இந்தியாவின் நோக்கம் என்றும் மத்திய வேளாண்துறை அமைச்சர் கூறினார்.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சிறுதானியங்களில் இடம் பெற்றுள்ள ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள், 14 மாநிலங்களின் 212 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது என்றும் மத்திய வேளாண்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், கொரோனா பெருந்தொற்று, பருவ நிலை மாறுபாடு, போர் பதற்றம் உள்ளிட்டவை சிறுதானியங்களின் தேவையை உலக நாடுகளில் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார். சர்வதேச நாடுகளின் உறவுகளை விட, உணவு பாதுகாப்பை பொருத்தவரை சிறுதானிங்கள் இன்றியமையாதவை என்று குறிப்பிட்ட அவர், கொரோனா பெருந் தொற்று காலம் உலக நாடுகளுக்கு உணவு பாதுகாப்பின் முக்கியத்துவை உணர்த்திருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை வித்தியாசமான முறையில் கொண்டாடப் பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் கடையம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பாக சர்வேதச சிறுதானிய ஆண்டு 2023 -ஐ முன்னிட்டு சிறுதானிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பாரம் பரிய சத்தான சிறுதானியங்களை மீட்டெடுக்கும் நோக்குடன் ஏராளமான சிறு தானிய வகைகள் வைத்து பொங்கல் கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில் இந்த வருடம் முழுவதும் சிறுதானியங்களை வலியுறுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் மேலும் பருவ காலங்கள் மாறி மாறி வருவதால் 2030 -ம் ஆண்டில் மிக பெரிய உணவு தட்டுப்பாடு வர இருப்பதால் இந்தப் பருவ கால மாற்றத்தை தாங்கி வளரக்கூடிய சிறுதானியங்களை மீட்டு எடுக்க பல்வேறு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும், மேலும் சிறுதானிய விதைகளை மீட்டெடுக்க வேண்டும் இதற்கு அரசு முன்வர வேண்டும் என இவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story