/* */

சட்டம், ஒழுங்கை பேணி பாதுகாக்க வேண்டும்.. புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை...

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

HIGHLIGHTS

சட்டம், ஒழுங்கை பேணி பாதுகாக்க வேண்டும்.. புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை...
X

புதிய மாவட்ட ஆட்சியர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

ஆட்சிப் பொறுப்பேற்று இந்த குறுகிய காலத்திற்குள்ளாக நம்முடைய அரசு சிறப்பான பெயரை பெற்றிருக்கிறது. இதற்கு எந்தவித மறுப்பும் யாரும் சொல்ல முடியாது. அந்த பெயரைப் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள், ஏதோ தனிப்பட்ட முதல்வரோ, தனிப்பட்ட தலைமைச் செயலாளரோ, தனிப்பட்ட அரசு அதிகாரிகளோ மட்டும் அல்ல, உங்களைப் போன்ற அதிகாரிகளும், அரசு அலுவலர்களும் தான் அதற்கு முழுமையான காரணமாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். அவைகள் எல்லாம் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்ற வகையில் காண்காணித்து. அதை நிறைவேற்றித் தருவதற்கான முழு பணியிலும் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று நான் உங்களை எல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.


புதிதாக பொறுப்பேற்றிருக்கக்கூடிய நீங்கள் மாவட்டத்தில் பொறுப்பேற்றவுடன், என்னென்ன பணி நடைபெறாமல் இருக்கிறது? என்னென்ன பணி எந்த நிலையில் இருக்கிறது? எந்த எந்த பணிகள் இன்னும் தொடங்க இயலாத நிலையில் இருக்கிறது? அதற்கு என்னென்ன இடையூறுகள் இருக்கின்றன? நீதிமன்றங்களில் என்னென்ன வழக்கு இருக்கிறது? என்பதைப் பற்றியெல்லாம் நீங்கள் கலந்தாய்வு நடத்தி அதையெல்லாம் விரைவாக, அந்தப் பணிகளை நிறைவேற்றக்கூடிய காரியத்தில் ஈடுபட வேண்டும்.

மிக விரைவில் நீங்கள் பொறுப்பேற்க கூடிய மாவட்டத்திற்கு நாங்கள் ஆய்விற்கு வருகிறபோது அது உங்களால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, அது உங்களால் சரிசெய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியை நீங்கள் சொல்லக்கூடிய அளவிற்கு, உங்களுடைய கடமையை நிறைவேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.

இன்றைக்கு ஆட்சியர்களாக பொறுப்பேற்கவுள்ள நீங்கள், மகாத்மா காந்தி அவர்கள் "களத்திற்கு செல்" என்று சொன்னதுபோல, அண்ணா அவர்கள் "மக்களிடத்தில் செல்" என்று அடிக்கடி சொல்வார்கள், அதைப்போல நீங்கள் மக்கள் நலப் பணிகளை செயல்படுத்தி மக்களை கவரக்கூடிய வகையில், ஆங்காங்கு பணியாற்றக்கூடிய அதிகாரிகளை அவர்களுக்கு உரிய பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபடவேண்டும்.

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய வகையில் உங்கள் மாவட்டங்களில் அதை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். எந்தவித அரசியல் மாச்சரியங்களுக்கு நீங்கள் இடம் கொடுக்காமல், அரசியல் பார்க்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அந்த உணர்வோடு மட்டுமே உங்களது பணி அமைய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


ஏதோ உங்களிடத்திலே பணிகளை விட்டுவிட்டு நாங்கள் அமைதியாக இருந்துவிடுவோம் என்று நீங்கள் எண்ண வேண்டாம். உங்களிடத்தில் உள்ள பணிகளில், என்னென்ன பணிகளை முடித்திருக்கிறீர்கள் என்பதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்யப்போகிறார். அதேபோல முதலமைச்சராக இருக்கக்கூடிய நானும் ஆய்வு செய்யப்போகிறேன்.

விரைவில், மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்போகிறோம். அப்படி தாக்கல் செய்யப்படுகிற நேரத்தில், என்னென்ன புதிய திட்டங்களை நாம் அறிவிக்க இருக்கிறோம். ஏற்கனவே அறிவித்திருக்கக்கூடிய திட்டங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அந்த நிதிநிலை அறிக்கையில் பேசப்படக்கூடிய ஒரு சூழ்நிலை வரும். அதையும் மனதில் வைத்துக்கொண்டு அதற்கும் நீங்கள் தகுந்த பதிலை நம்முடைய அரசுக்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு, புதிதாக பொறுப்பேற்கவுள்ள நீங்கள், சிறப்பான முறையில் கடமையாற்றி இந்த அரசுக்கு ஒரு நற்பெயரை தேடித்தாருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Updated On: 4 Feb 2023 5:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  4. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  5. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  7. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  9. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  10. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்